மைதானத்துக்குள் கோமாளிபோல் நடந்து கொண்ட வங்கதேச வீரர்கள்?பாம்பு நடனம்,மோதல், வாக்குவாதம், கண்ணாடி உடைப்பு இன்னும் பல ….

இலங்கை அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி முத்தரப்பு டி 20 ஓவர் கிரிக்கெட் தொடரில்  இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியின் போது பங்களாதேஷ் வீரர்கள் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இலங்கை, பங்களாதேஷ் அணிகள் மோதின.

 

இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தாலும் மறுமுனையில் தொடக்க வீரர் தமீம் இக்பால் 50 ரன்கள் சேர்த்து அணியை இறுதி கட்டத்துக்குச் கொண்டு சென்றார். கடைசியில் அதிரடியாக விளையாடிய மஹமத்துல்லா, 18 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். இதனால் அந்த அணி திரில்லிங் வெற்றி பெற்றது. இதையடுத்து இறுதிப் போட்டியில் இந்தியா- பங்களாதேஷ் அணிகள் நாளை மோதுகின்றன.

இந்தப் போட்டியின் கடைசி ஓவரில் பங்களாதேஷ் மாற்று வீரருக்கும் இலங்கை வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக வெடித்தது.கடைசி ஓவரை இலங்கை வீரர் உதனா வீசினார். முதல் பந்து பவுன்சராக பங்களாதேஷ் வீரர் முஷ்தாபிஷூர் ரகுமான் தோள்பட்டைக்கு மேல் சென்றது. நோ-பால் கொடுக்கவில்லை. இரண்டாவது பந்தும் அதே மாதிரி உயரத்தில் சென்றது. லெக் அம்பயர் நோ பால் சிக்னல் கொடுத்தாராம். அதை நடுவர் கவனிக்கவில்லை. மஹ்முதுல்லா நடுவர்களிடம் நோ-பால் கொடுக்க வேண்டும் என்று வாக்குவாதம் செய்தார். அப்போது தண்ணீர் பாட்டில் கொண்டு வந்த பங்களாதேஷ் மாற்றுவீரர், இலங்கை கேப்டன் திசாரா பெரேராவிடம் ஏதோ கோபமாக சொன்னார். இதனால் இலங்கை வீரர் ஒருவர் அவரை தள்ளினார். இது மோதலாக மாறியது.

 

டிரெஸிங் ரூமில் இருந்த பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் அல் ஹசன், மைதானத்துக்கு வெளியே வந்து ஏதோ கத்தினார். பின்னர் ’ஆட வேண்டாம், வெளியே வாருங்கள்’ என்று வீரர்களை வரச் சொன்னார். இதையடுத்து பரபரப்பானது. பின்னர் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தர் மஹமுத்துல்லா. இதையடுத்து மைதானத்துக்குள் ஓடி வந்த பங்களாதேஷ் வீரர்கள், பாம்பு நடனம் ஆடி, கத்தினர்.

இலங்கை வீரர் குசல் மெண்டிஸ், பங்களாதேஷ் வீரர்களை நோக்கி கோபமாகச் திட்டினார். அவரை பங்களாதேஷ் வீரர் தமிம் இக்பால் சமாதானம் செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கல்லி கிரிக்கெட்டில் நடக்கும் சண்டை போல இந்த சண்டை நடந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே, பங்களாதேஷ் டிரெஸ்சிங் ரூமில் இருந்த வீரர்கள் சிலர், அறையின் கண்ணாடியை உடைத்துள்ளனர். இது அங்குள்ள கேமராவில் பதிவானது. இதையடுத்து அந்த வீரர் யார் என்பதை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிந்தது. பின்னர் பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகம், அதற்கான இழப்பீட்டை சரி செய்வதாகத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இந்த பிரச்னை காரணமாக ஐசிசி, பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.

இதற்கிடையே ரசிகர் ஒருவர்  வங்கதேச வீரர் முஸ்பிகூர் ரஹீம் பாம்பு நடனம் ஆடுவது போலும் அதை பாம்பாட்டி வாசிப்பது போன்று கேலிசெயதுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment