ஆசியக் கோப்பை தொடர்: முதல் இரண்டு போட்டிகளில் கே.எல்.ராகுல் கிடையாது – ராகுல் டிராவிட்

ஆசிய கோப்பை 2023 தொடர் நாளை பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் மோதும் போட்டியுடன் தொடங்கும் நிலையில், செப்.2ம் தேதி இலங்கையில் பாகிஸ்தானை எதிர்கொள்ள தீவிர பயிற்சிக்கு பின் இந்திய அணி இலங்கைக்கு புறப்பட உள்ளது. இந்த நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் விளையாட மாட்டார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில், கே.எல்.ராகுலின் உடற்தகுதியில் நல்ல முன்னேற்றம் உள்ளது. ஆனால், ஆசிய கோப்பை தொடரின் இந்தியாவின் முதல் இரண்டு போட்டிகளான பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திற்கு எதிரான போட்டிகளில் அவர் பங்கேற்கமாட்டார். இதனிடையே, பெங்களூரில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA)  இருக்கும் கேஎல் ராகுல், ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னதாக செப்டம்பர் 4-ஆம் தேதி மீண்டும் அவரது உடற்தகுதி குறித்து சோதனை நடத்தப்படும் என கூறியுள்ளார்.