ஆகஸ்ட் 31 முதல் ஆசிய கோப்பை தொடர்.. பாகிஸ்தானில் 4 போட்டிகள், இலங்கையில் 9 போட்டிகள்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு.

2023-ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ஆசிய கோப்பை தொடரில் மீதம் 13 போட்டிகளில், 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கான், நேபாளம் ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றனர். இந்த 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று முடிவில் 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடப்படுகிறது.

ஆசியக்கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்றால் இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாது என பிசிசிஐ மறுத்ததை அடுத்து, இலங்கை மற்றும் பாகிஸ்தானில் போட்டிகளை நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இதனால், இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெற உள்ளது.

13 போட்டிகள் கொண்ட ஆசியக்கோப்பை தொடரில், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் ஒரு குழுவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் மற்றுமொரு குழுவிலும் இடம் பெற்றுள்ளன. சூப்பர் ஃபோரில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 17 அன்று இறுதிப் போட்டியில் விளையாடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.