ASEAN :  ஏசியன் உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி.! இந்தோனீசியாவில் பாரம்பரிய வரவேற்பு.! 

இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், புருனே, மியான்மர், கம்போடியா, திமோர்-லெஸ்டே மற்றும் லாவோஸ் ஆகிய ஆசிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள சர்வதேச கூட்டமைப்பாக ஏசியன் (ASEAN) கூட்டமைப்பு உள்ளது.

மேற்கண்ட ஏசியன் (ASEAN) கூட்டமைப்பு உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் நமது பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் இன்று இந்தோனீசியா புறப்பட்டுள்ளார். இந்த பயணம் 2 நாள் குறுகிய பயணமாக அமைய உள்ளது.

அடுத்த வாரம் ஜி20 மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளதால், இந்த ஏசியன் கூட்டமைப்பு ஆலோசனை 2 நாட்களில் முடித்து நாளை நாடு திரும்ப உள்ளார் பிரதமர் மோடி. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இன்று விமானம் மூலம் இந்தோனீசிய தலைநகர்  ஜகார்தாவிற்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி. அவருக்கு இந்தோனீசிய முறைப்படி பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் உடன் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் சென்றுள்ளார்.

இந்த பயணம் பற்றி பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், ஏசியன் (ASEAN) – இந்தியா உச்சிமாநாடு ஒரு சிறந்த எதிர்காலத்திற்கானது. நமது நாட்டின் ஒத்துழைப்புக்கு இது ஒரு சான்றாகும். மனித முன்னேற்றத்திற்காக எதிர்காலத் துறைகளில் இணைந்து பணியாற்ற நாங்கள் காத்திருக்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி  X சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.