புதுச்சேரி மாநில தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அறிவித்த அதிமுக..!

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலைதொடர்ந்து அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளது.

புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. புதுச்சேரியில் 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துக்கான உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நகராட்சிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதியும், 2-ஆம் கட்டமாக புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்கு அக்டோபர் 25 ஆம் தேதியும், 3ம் கட்டமாக கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு அக்டோபர் 28 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், அதிமுக சார்பில் அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளது. இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  புதுச்சேரியில்‌ உள்ள 5 நகராட்சிகள்‌ மற்றும்‌ 10 கொம்யூன்‌ பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சித்‌ தேர்தல்கள்‌ வருகின்ற அக்டோபர் 21,25 மற்றும் 28 ஆகிய தேதிகளில்‌ மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ போட்டியிட உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காகவும்‌,

கூட்டணிக்‌ கட்சிகளுடன்‌ பேச்சுவார்த்தை நடத்தி, கழகம்‌ மற்றும்‌ கூட்டணிக்‌ கட்சிகள்‌ போட்டியிடும்‌ இடங்களை தேர்வு செய்வதற்காகவும்‌, கழகத்தின்‌ சார்பில்‌ அறிவிக்கப்படும்‌ வேட்பாளர்கள்‌ மற்றும்‌ கூட்டணிக்‌ கட்சிகளின்‌ வேட்பாளர்கள்‌ வெற்றிபெறும்‌ வகையில்‌ தேர்தல்‌ பணிகளை மேற்கொள்வதற்காகவும்‌, புதுச்சேரி மாநில தேர்தல்‌ பணிக்குழுப்‌ பொறுப்பாளர்கள்‌ நியமிக்கப்படுகிறார்கள்‌.

முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, செல்லூர் ராஜு, எம்சி சம்பத், புதுச்சேரி மாநில (கிழக்கு) கழகச்‌ செயலாளர்‌ அன்பழகன், புதுச்சேரி மாநில (மேற்கு) கழகச்‌ செயலாளர்‌ ஓம்சக்தி சேகர்‌, காரைக்கால்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌ v.ஓமலிங்கம்‌

அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல்‌ பொறுப்பாளர்களோடு, புதுச்சேரி மாநிலம்‌ (கிழக்கு, புதுச்சேரி மாநிலம்‌ மேற்கு) மற்றும்‌ காரைக்கால்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த கழக நிர்வாகிகளும்‌, கழக உடன்பிறப்புகளும்‌ இணைந்து, கழகத்தின்‌ சார்பில்‌ அறிவிக்கப்படும்‌ வேட்பாளர்கள்‌ வெற்றி பெற்றிடும்‌ வகையில்‌, சிறந்த முறையில்‌ தேர்தல்‌ பணிகளை ஆற்றிட வேண்டுமெனக்‌ கேட்டுக்கொள்கிறோம்‌, என தெரிவித்துள்ளனர்.