41 தொழிலாளர்களை மீட்ட பின் அங்கிருந்த கோவிலில் வழிபட்ட அர்னால்ட் டிக்ஸ்..!

கடந்த நவம்பர் 12-ஆம் தேதி உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் நடைபெற்று வந்த சுரங்கப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். 17 நாட்களாக இவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

நேற்று இயந்திரம் மூலம் துளையிடும் பணி நிறுத்தப்பட்டு எலிவளைச் சுரங்க முறை மூலம் தொழிலாளர்களைக் கொண்டு துளையிடும் பணி தொடங்கியது. எலிவளைச் சுரங்க முறையில் ஈடுபட்ட பணியாளர்கள் கைக்கருவிகளை கொண்டு  சுரங்கப்பாதையை உருவாக்கினார்கள்.

இந்த எலிவளைச் சுரங்க முறை மூலம் ஒரு நபர் மட்டுமே ஊர்ந்து செல்லக்கூடிய அளவுக்கான ஒரு துளையை உருவாக்கி 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படைகளைச் சேர்ந்த வீரர்கள் ஈடுபட்டனர்.

 மீட்கப்பட்ட தொழிலாளர்களை முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மத்திய அமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து மீட்கபட்ட தொழிலாளர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்காக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியா நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் அவர்கள் 41 தொழிலாளர்களையும் மீட்ட பின் அங்கு இருந்த கோயிலில் மண்டியிட்டு நன்றி தெரிவித்தார். அவர் கூறுகையில், நாங்கள் கிரிக்கெட்டில் மட்டும் சிறந்தவர்கள் அல்ல, சுரங்க விபத்து மீட்புப் பணி உள்பட மற்ற விஷயங்களிலும் சிறந்தவர்களே. இந்த பணியில் என்னை ஈடுபடுத்திய எங்கள் நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பெனிஸ்-க்கு எனது நன்றிகள் என தெரிவித்துள்ளார்.

மேலும், மீட்பு பணியில் பங்கெடுத்தது கவுரவம்; ஒரு தந்தையாக, தொழிலாளர்களை அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்ததில் மகிழ்ச்சி. மீட்பதற்கு என்ன செய்ய வேண்டும் என எங்களுக்கு புரிதல் இருந்தது; நாங்கள் கள் சிறந்த குழுவாக பணியாற்றினோம். இந்தியாவில் சிறந்த பொறியாளர்கள் உள்ளனர்; இந்த வெற்றிகரமான பணியின் ஒரு பகுதியாக இருந்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.