2006ல் தொடங்கப்பட்ட திட்டம் தான் ஆதித்யா..கடந்து வந்த பாதையை சொல்வது கடமை! – காங்கிரஸ்

சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் ஆதித்யா -எல்1 விண்கலம் இன்று விண்ணில் ஏவப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் மையத்தில் இருந்து ஆதித்யா -எல்1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சூரியனை ஆய்வு செய்யும் முதல் இந்திய விண்கலமான ஆதித்யா -எல்1 PSLV C-57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆதித்யா -எல்1 விண்கலம் வெற்றிகரமாக வின்னி செலுத்தப்பட்டதுக்கு, அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்-1 திட்டம் 2006ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது என்று காங்கிரேஸின் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், 2006 முதல் 2023 வரை ஆதித்யா திட்டம் கடந்து வந்த பாதையை எடுத்துரைக்க வேண்டியது கடமை.  2006ல் இந்திய வானியல் கழகம் மற்றும் இந்திய அறிவியல் அகாடமியின் விஞ்ஞானிகள் ஒரு கருவியுடன் கூடிய சூரிய ஆய்வகம் என்ற கருத்தை முன்மொழிந்தனர்.

ஆதித்யா எல்-1 திட்டம் தொடர்பாக 2008 மார்ச் மாதம் விஞ்ஞானிகள் இஸ்ரோவுக்கு பரிந்துரைகளை வழங்கினர்.  2013 ஜூன் மாதம் ஆதித்யா -1 என பெயரிடப்பட்ட திட்டத்தின் பெயர் தற்போது ஆதித்யா எல்-1 என மாற்றப்பட்டுள்ளது. 2015 நவம்பர் ஆதித்யா-எல்1க்கு இஸ்ரோ முறைப்படி ஒப்புதல் அளித்தது. எனவே, தற்போது வெற்றிகரமாக ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணின் செலுத்தி, இஸ்ரோ மற்றும் இந்தியா மற்றுமொரு சாதனையை படைத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.