4 மணி நேரம் கெடு…நடிகர் சங்கத்துக்கு செக் வைத்த நடிகர் மன்சூர் அலிகான்!

நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷாவுடன் இணைந்து லியோ படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் த்ரிஷா பற்றி பேசியது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த அளவுக்கு அவர் என்ன பேசினார் என்றால் ”லியோ படத்தில் த்ரிஷாவுடன் என்று நடிக்கிறோம் என்றவுடன் ரொம்பவே சந்தோஷபட்டேன். கண்டிப்பா பேட் ரூம் சீன் எல்லாம் இருக்கும் நடித்துவிடலாம்” என்பது போல சற்று கொச்சையாக பேசி இருந்தார்.

அவர் பேசியதற்கு நடிகை த்ரிஷா ”சமீபத்தில் மன்சூர் அலி கான் என்னைப் பற்றி கேவலமாக பேசிய வீடியோ பார்த்தேன். அவர் பேசியதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் இது பாலியல், அவமரியாதை, பெண் வெறுப்பு, வெறுப்பு மற்றும் மோசமான அவர் எண்ணத்தை காட்டுகிறது. அவர் ஆசைப்படலாம் ஆனால் நான் அவரைப் போன்ற ஒருவருடன் திரையில் நடித்ததில்லை என்பதற்கு திரைத்துறையினருக்கு நன்றி கூறுகிறேன். இனிமேல் அவருடன் நான் நடிக்க மாட்டேன்” என கூறினார்.

த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் இப்படி பேசியதற்கு லோகேஷ், கார்த்திக் சுப்புராஜ், மஞ்சிமா மோகன், மாளவிகா மோகனன், சின்மயி, குஷ்பூ என பல பிரபலங்கள்  தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர். இதுவரை இந்த சர்சை கூறிய கருத்துக்கு மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்கவில்லை. இந்த நிலையில், நேற்றைய தினம் த்ரிஷா பற்றி மன்சூர்அலிகான் பேசிய சர்ச்சை விவகாரத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது, நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் வலுத்துள்ள நிலையில் மன்சூர் அலிகான் இன்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “நடிகை த்ரிஷா பற்றி நான் தவறாக பேசவில்லை, சர்ச்சை பேச்சு வீடியோ குறித்து என்னிடம் யாரும் விளக்கம் கேட்கவில்லை. நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? மக்களுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். தமிழ்நாடே என் பக்கம் இருக்கிறது” என்று கூறிஉள்ளார்.

இது குறித்து அவர் விரிவாக பேசுகையில், “நடிகர் சங்கம் பெரிய தவறை செய்துள்ளது நடிகர் சங்கம் 4 மணி நேரத்தில் என் மீதான நோட்டீசை வாபஸ் வாங்கணும். முறைப்படி விளக்கம் கேட்கணும் இல்லைன்னா பிரளயம் நடக்கும். நான் இளிச்ச வாயனா? என்னை பலிகடா ஆக்கி, நற்பெயர் வாங்க நடிகர் சங்கம் முயற்சி செய்கிறது” என்று மிகவும் கோபத்துடன் பேசியிருக்கிறார்.

த்ரிஷா – மன்சூர் அலிகான் விவகாரம்: கண்டனம் தெரிவித்த பிரபலங்கள்!

மேலும் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிதற்கு, “சினிமாவில் ‘ரேப்’ செய்வது என்றால் உண்மையாக ரேப் செய்வது என்று அர்த்தமா? கொலை செய்வது என்றால் உண்மையாக கொலை செய்வதா? கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறியதால் பேசினேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.