அரையாடை அணிந்து ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வென்ற போராளி! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள், காந்தியடிகளின் நினைவிடம் மற்றும் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியுள்ளனர். அந்த வகையில்,  பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ஆகியோர் காந்தியடிகளின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி உள்ளனர்.  

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள சிலைக்கு கீழ், வைக்கப்பட்டுள்ள அவரின் உருவப்படத்திற்கு  மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘அரையாடை அணிந்து ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வென்ற போராளி! வெறுப்புணர்வுக்கு எதிராக ஒற்றை மனிதராக நின்று சமூகத்தில் அமைதி மலரப் பாடுபட்டவர்! அவரது வாழ்வின் பொருளை உணர்த்தவே, இந்த நாட்டிற்கே ‘காந்தி தேசம்’ எனப் பெயரிட வேண்டும் எனத் தந்தை பெரியார் வலியுறுத்தினார்.

அண்ணல் என்றும் மகாத்மா என்றும் இந்த நாடும் பாரும் போற்றும் நமது தேசத் தந்தை காந்தியாரின் பிறந்தநாளில், அவர் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவரது இலட்சியப் பாதையில் வெறுப்புணர்வை ஒழித்து, எல்லார்க்கும் எல்லாம் என்ற இந்தியாவைக் கட்டமைப்போம்.’ என பதிவிட்டுள்ளார்.