சென்னை : குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் உடல்கள் மீட்பு.! போலீசார் தீவிர விசாரணை.!

சென்னையில் கோவில் தீர்த்தவாரியின் போது 5 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சென்னை மடிப்பாக்கம் அருகே மூவரசம்பேட்டையில் உள்ள கோவில் குளத்தில் மூழ்கி 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த பெரும் சோகமான சம்பவம் நடந்துள்ளது. மூவரசம்பேட்டையில் உள்ள கோவிலுக்கு அருகில் கோவிலுக்குச் சொந்தமான குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் தீர்த்தவாரி உற்ச்சவ திருவிழா நடந்துள்ளது.

இதையடுத்து, பூஜைகள் முடிந்த பின்பு தன்னார்வலர்கள் 25 பேர் குளத்தில் இறங்கி, சாமிக்கு அபிஷேகம் செய்யும் கலசம் மற்றும் பூஜை பொருட்களை நீரில் மூழ்க வைத்ததோடு அவர்களும் மூழ்கியுள்ளனர். ஆனால், மூழ்கியவர்களில் 5 பேர் மீண்டும் குளத்தில் இருந்து மேலே வரவில்லை.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், தண்ணீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், குளத்தில் மூழ்கியவர்களில் ராகவன், லோகேஸ்வரன், பானேஷ், சூர்யா ஆகிய 4 பேரின் உடல்கள் உடனடியாக மீட்கப்பட்டன. மேலும், 5-வது நபரைத் தேடி வந்த நிலையில் அவருடைய உடலும் கிடைத்துவிட்டது.

இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குளத்தில் விழுந்து 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment