உத்தரகண்ட் சுரங்கத்தில் இருந்து 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு..!

கடந்த நவம்பர் 12-ஆம் தேதி உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் நடைபெற்று வந்த சுரங்கப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 16-வது நாளான நேற்று இயந்திரம் மூலம் துளையிடும் பணி நிறுத்தப்பட்டு எலிவளைச் சுரங்க முறை மூலம் தொழிலாளர்களைக் கொண்டு துளையிடும் பணி தொடங்கியது.

இந்தமுறை நிலக்கரிச் சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் முறையாகும். எலிவளைச் சுரங்க முறையில் ஈடுபட்ட பணியாளர்கள் கைக்கருவிகளை கொண்டு  சுரங்கப்பாதையை உருவாக்கினார்கள். இந்த எலிவளைச் சுரங்க முறை மூலம் ஒரு நபர் மட்டுமே ஊர்ந்து செல்லக்கூடிய அளவுக்கான ஒரு துளையை உருவாக்கினார்கள். இந்நிலையில், இந்த முயற்சி வெற்றியடைந்தது தொடர்ந்து தற்போது 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படைகளைச் சேர்ந்த வீரர்கள் ஈடுபட்டனர்.

மீட்கப்பட்ட அனைத்து தொழிலாளர்கள் தனி தனி  ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். மீட்கப்பட்ட தொழிலாளர்களிடம் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மத்திய அமைச்சர் வி.கே.சிங் நலம் விசாரித்தனர். தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்கள் மீட்கப்பட்ட பின்னர் அப்பகுதியில் இருந்த மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

17 நாட்கள் போராட்டத்துக்குப் பின் 41 தொழிலாளர்களை மீட்ட மீட்புக் குழுவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு தெரிவித்தார்.