பிறந்த நாள் பரிசாக ஒரு நாள் மட்டும் 9 ரூபாய் பெட்ரோல் விலை குறைத்த ராஜ் தாக்கரே..!

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவின் பிறந்த நாளையொட்டி மகாராஷ்டிராவின் குறிப்பிட்ட பெட்ரோல் நிலையங்களில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.9 வரை தள்ளுபடி வழங்கப்பட்டது.

சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ராஜ் தாக்கரே கடந்த 2006-ம் ஆண்டில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். அவர் நேற்று தனது 50-வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

இதையொட்டி மகாராஷ்டிரா முழுவதும் குறிப்பிட்ட பெட்ரோல் நிலையங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.4 முதல் ரூ.9 வரை தள்ளுபடி வழங்கப்பட்டது.

இதுகுறித்து மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி தலைவர்கள் கூறியபோது, “மும்பை உட்பட மாநிலம் முழுவதும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.26-க்கு விற்கப்பட்டது. எங்கள் கட்சித் தலைவரின் பிறந்த நாளையொட்டி லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.9 வரை தள்ளுபடி விலையில் பெட்ரோல் கிடைக்க ஏற்பாடு செய்தோம். காலை 8 மணி முதல் பிற்பகல் வரை இந்தச் சலுகை வழங்கப்பட்டது” என்று தெரிவித்தனர்.

இதன் காரணமாக மகாராஷ்டிரா முழுவதும் பெட்ரோல் நிலையங்களில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. ராஜ் தாக்கரேவின் பிறந்த நாள் பரிசுக்கு நன்றி கூறிய வாகன ஓட்டிகள், பெட்ரோல் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Leave a Comment