ககன்யான் சோதனை விண்கலம் விண்ணில் செலுத்தப்பட ஏன் தாமதம்..?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்   விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

கன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் TV-D1 ராக்கெட் மூலம் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்து இருந்தது. தரையில் இருந்து 16.6  கி.மீ. தூரம் வரை அனுப்பி, மீண்டும் அதை பூமிக்கு கொண்டுவந்து வங்கக்கடலில் இறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ககன்யான் திட்ட முதற்கட்ட சோதனை வெற்றி!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில்,  காலை 8 மணிக்கு நடைபெற இருந்த சோதனை மோசமான வானிலை காரணமாக, 8:30-க்கு  நடைபெறும் என  அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், மோசமான வானிலை, கணினி தொழில்நுட்ப கோளாறு காரணமாக 3 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில்,  ககன்யான் திட்டத்திற்கான முதல் கட்ட சோதனை ஓட்டம் காலை 10 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், விண்கலம் உள்ளிட்ட ராக்கெட் முழுவதுமாக பாதுகாப்பாக உள்ளது. ஆனால் மோசமான வானிலை, கணினி தொழில்நுட்ப கோளாறு காரணமாக தான், மாதிரி விண்கலத்தின் சோதனை ஓட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்த பிரச்னை சரிசெய்யப்பட்டு ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் விண்ணில் பாய்ந்து இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளது என தெரிவித்து இருந்தார்.

அதன்படி, மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் விண்ணில் பாய்ந்து இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளது. ககன்யான் விண்கலன்ஏவப்பட்ட 90 விநாடியில் ராக்கெட்டில் இருந்து பிரிந்தது. தற்போது கடலில் விழுந்த பணிக்குழு கலன் மீட்கப்பட்டுள்ளது.