எங்களுக்கு பலம் விஜய் தான் – புஸ்ஸி ஆனந்த்

தளபதி விஜய் அவர்கள் எப்போதுமே மாணவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர் என புஸ்ஸி ஆனந்த் பேட்டி. 

தமிழ் திரையுலகின் முன்னணி  நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக 10, 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார்.இதற்க்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்த நிலையில், அந்த நிகழ்வில் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என பேசியிருந்தது பலரின் பாராட்டுக்களை பெற்றது.

இந்த நிலையில், இன்று நடிகர் விஜயின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், அவரது ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஜய் பிறந்தநாள் செயல்பாடுகள் குறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அவர் பேசுகையில், இன்றுகாலையில் இருந்து கோயில்கள், சர்ச் மற்றும் தர்காவில் பிரார்த்தனை ஏறெடுக்கப்பட்டது. அன்னதானம், இரத்ததானம் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். தளபதி விஜய் அவர்கள் எப்போதுமே மாணவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர். எங்களுக்கு பலம் விஜய் தான் என்றும் தெரிவித்த அவர், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவது எப்போது?  என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துள்ளார்.