Today’s Live: மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கு..! இடைக்கால தடை விதித்தது பாட்னா நீதிமன்றம்..!

ராகுல் காந்தி விவகாரம்: 

மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு எதிரான வழக்கில் ராகுலுக்கு ஆறுதல் கிடைத்துள்ளது. இந்த வழக்கு ஏற்கனவே சூரத் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும்போது, வேறு நீதிமன்றத்தில் விசாரணை நடத்த முடியாது என ராகுல் தரப்பு மனு சமர்பித்தது. இதை ஏற்றுக்கொண்ட பாட்னா நீதிமன்றம் வழக்கை மே 15ம் தேதி தள்ளி வைத்தது. இனி அவர் பாட்னா நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக வேண்டியதில்லை.

24.04.2023 5:45 PM

12 மணி நேர வேலை மசோதா:

12 மணி நேர வேலை மசோதாவுக்கு திமுகவின் தொழிற்சங்கமான தொமுச எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 12 மணி நேர வேலை மசோதா குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் தலைமையில் பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடந்தது. அப்போது, இந்த சட்டமசோதாவில் சில திருத்தங்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளதாக தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

24.04.2023 4:30 PM

ஜெமினி சர்க்கஸ் நிறுவனர் காலமானார்:

இந்திய சர்க்கஸ் நிறுவனத்திற்கு முன்னோடியும் ஜெமினி சர்க்கஸ் நிறுவனருமான ஜெமினி சங்கரன், உடல்நலக்குறைவால் தனது 99-வது வயதில் நேற்று இரவு காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு (ஏப்ரல் 23ம் தேதி) இரவு ஜெமினி சங்கரன் உயிரிழந்துள்ளார்.

24.04.2023 3:45 PM

மம்தாவிடம் பேச்சுவார்த்தை:

மேற்கு வங்க CM மம்தா பானர்ஜியை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இருவரும் கூட்டாக சந்தித்து பேச்சுவார்த்தையில் நடத்தினர். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

24.04.2023 1:45 PM

உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்:

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய கோரி வினேஷ் போகட் மற்றும் ஏழு மல்யுத்த வீரர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

24.04.2023 1:00 PM

டிஎஸ்பிஎஸ்சி வினாத்தாள் கசிவு:

ஹைதராபாத்தில் உள்ள டிஎஸ்பிஎஸ்சி வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக எஸ்ஐடி அலுவலகத்துக்குச் செல்வதைத் தடுப்பதற்காக காவலில் வைக்கப்பட்டிருந்த ஒய்எஸ்ஆர்டிபி (யுவஜன ஸ்ராமிக்க ரைத்து தெலுங்கானா கட்சி) தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா காவல்துறையினரைத் தாக்கியுள்ளார்.

24.04.2023 12:15 PM

காவலர் பணியிட மாற்றம்:

நாகையில் பேருந்து செல்லமுடியாமல் காவல்துறை தடுப்பு அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அப்போது காவல் உதவி ஆய்வாளர் பழனிவேல் போராட்டத்தில் ஈடுபட்ட நபரை பூட்ஸ் காலால் உதைத்து ஒருமையில் பேசினார். இதுதொடர்பாக வீடியோ வைரலான நிலையில். காவலர் பழனிவேலை ஆயுதப்படைக்கு மாற்றி நாகை மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

24.04.2023 11:30 AM

ஹெல்ப்லைன் எண் :

வன்முறையால் பாதிக்கப்பட்ட சூடானில் சிக்கித் தவிக்கும் குடிமக்களின் உதவிக்காக மத்தியப் பிரதேச அரசு முதலமைச்சரின் ஹெல்ப்லைன் எண்ணை வெளியிட்டுள்ளது. சூடானில் சிக்கியுள்ள மத்தியப் பிரதேசம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த குடிமக்களுக்கு உதவ மத்தியப் பிரதேச அரசு முதல்வர் ஹெல்ப்லைனைத் தொடங்கியுள்ளது. சூடானில் சிக்கித் தவிக்கும் மாநில மற்றும் வெளி மாநில குடிமக்கள் ஹெல்ப்லைன் எண்ணை (+917552555582) தொடர்பு கொள்ளலாம்.

24.04.2023 11:05 AM

கருணை மதிப்பெண்:

நடந்து முடிந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில தேர்வு தாளில் கேட்கப்பட்ட தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தவறாக கேட்கப்பட்ட ஒரு 3 மதிப்பெண் கேள்வி, ஒரு 2 மதிப்பெண் கேள்விக்கு ஏதேனும் ஒரு பதில் எழுதியிருந்தால் அதற்கான முழு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த தேர்வின் முடிவுகள் மே 17ம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

24.04.2023 10:35 AM