ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய திலக் வர்மா தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டி20 தொடரில் விளையாட அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை அருமையாக பயன்படுத்தி அவர் விளையாடி வருகிறார் என்றே கூறலாம்.
குறிப்பாக முதல் டி20 போட்டியில் 39 ரன்கள், இரண்டாவது போட்டியில் 51 ரன்கள், மூன்றாவது போட்டியில் 49 ரன்கள் என வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டியிலும் அருமையாக விளையாடி அட்டகாசமான பார்மில் இருக்கிறார். அவருடைய பேட்டிங் பற்றி பலரும் அவரை பாராட்டி பேசி வருகிறார்கள்.
அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் அண்மையில் ஒரு பேட்டியில் திலக் வர்மா ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் அருமையாக விளையாட தகுதியானவர். அவரை வருகின்ற உலகக்கோப்பை போட்டியில் அணியில் சேர்த்தால் கூட ஆச்சரியபட வேண்டாம்” என வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” கடந்த 3 போட்டிகளில் திலக் வர்மாவின் பேட்டிங் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது. அவருடைய பேட்டிங் பல அனுபவங்கள் வாய்ந்த வீரர்கள் விளையாடுவது போல இருக்கிறது.
அணியில் எந்த தருணத்தில் எப்படி விளையாடவேண்டும் எப்படி விளையாடக்கூடாது எந்த சமயத்தில் நிதானமாக விளையாடவேண்டும் எந்த சமயத்தில் அதிரடியாக விளையாடவேண்டும் என்பதை உணர்ந்துகொண்டு விளையாடுகிறார். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் இருக்கும் வரை அவர் வேறுமாதிரி விளையாடினார் அவர் அட்டமிழந்த பிறகு அவர் வேறுமாதிரி விளையாடினார்.
என்னை பொறுத்தவரை திலக் வர்மா டி20 போட்டியில் மட்டும் தான் அருமையாக விளையாடுவார் என இல்லை 50 ஓவர்கள் போட்டியில் கூட அவரால் நன்றாக விளையாட முடியும். இவரை போல ஒரு வீரர் நம்மளுடைய அணியில் இருப்பது நமது அணிக்கு பக்க பலமாக இருக்கும். மிடில் ஆர்டரில் இந்திய அணிக்கு இடது கை வீரர் இருந்தால் நல்லது தான். எனவே அவருடைய திறமைகளை பார்த்து அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகளை வழங்கவேண்டும்” என வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.