இவ்ளோ கோவம்லாம் உடம்புக்கு நல்லதில்ல – ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த அட்வைஸ்!

கொஞ்ச நாளாகவே சோசியல் மீடியாவில் உங்க கோவம் அதிகமா இருக்கே ஏன்? அது வேணாம் என்று  தனது ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘லியோ’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, மாபெரும் வசூல் வேட்டையை நடத்தியது. அதனை கொண்டாடும் வகையில், லியோ வெற்றி விழா நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

முன்னதாக, இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய்யின் பேச்சைக் கேட்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், நேற்று நடைபெற்ற வெற்றி விழாவில், தளபதி விஜய் தனது குட்டி ஸ்டோரியை எடுத்துவிட்டு ரசிகர்களை குஷி படுத்தினார்.

லியோ பட வெற்றி விழாவில் ரசிகர்களின் ஆரவாரமான ஆரவாரங்களுக்கு மத்தியில் மேடை ஏறிய நடிகர் விஜய், வழக்கம் போல் தனது பாணியில் விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு குட்டி கதை சொல்லி அதனை முறியடித்துள்ளார். வெற்றி விழாவில், பாடல், குட்டி கதை, படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என பல பகிர்ந்து கொண்டதோடு, தனது ரசிகர்களுக்கும் அட்வைஸ் செய்துள்ளார்.

ரசிகர்களுக்கு அட்வைஸ்

சமூக வலைதளங்களில் உங்கள் கோபம் அதிகமாக உள்ளது என்று லியோ வெற்றி விழாவில் ரசிகர்களிடம் விஜய் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நாம் யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். நமக்கு நிறைய வேலை உள்ளது, அதனை பார்க்கலாம். மகாத்மா காந்தியை மேற்கோள் காட்டி, “வன்முறையை விட அகிம்சை சக்தி வாய்ந்தது, எனவே அமைதியாகவும் அமைதியாகவும் இருங்கள்” என்றார்

மேலும், எந்த எதிர்பார்ப்புமே இல்லாம என் மேல நீங்க வச்சிருக்க இந்த அன்புக்கு நான் திருப்பி என்ன செய்யப் போறேன். என் உடம்பு தோல உங்க காலுக்கு செருப்பா தச்சு போட்டாலும் கூட அது போதாது.

இத்தனை அன்பு என் மீது வைத்துள்ள உங்களுக்கு நான் என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால் உங்களது உழைப்பில் எனக்காக செலவு செய்யும் ஒவ்வொரு காசுக்கும் உண்மையாக இருப்பேன் என்று லியோ பட வெற்றி விழாவில் நடிகர் விஜய் உருக்கமாக பேசியுள்ளார்.

குட்டி கதை

ஒரு காட்டுல யானை, புலி, மான், காக்கா, கழுகுன்னு நிறைய மிருகங்கள் இருந்துச்சு. காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்கு போனாங்க. ஒருத்தர் வில் அம்போட போய் முயல பிடிச்சிட்டு வந்தாரு. இன்னொருவர் ஈட்டியோட சென்று யானைக்கு குறி வச்சாரு..ஆனால் இறுதியில் ஒன்னும் இல்லாம வந்தாரு.

இதுல யார் வெற்றியாளர்? நிச்சயமா யானைக்கு குறி வச்சவர்தான் வெற்றியாளர். பாரதியார் சொல்வது போல் பெரிதினும் பெரிது கேள், எப்பவும் பெரிய விஷயங்களுக்கே கனவு காணுங்க என்று கூறி, பெரிய இலக்கை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.