இவற்றிற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது! ஆட்சியர்கள், எஸ்பிக்கள் மாநாட்டில் முதலமைச்சர் உரை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகளின் 2 நாள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள், ஆட்சியர்கள், காவல்துறை அலுவலர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

சட்ட – ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் விரிவான ஆய்வும், அரசின் புதிய அறிவிப்புகள், திட்டங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, அரசுக்கு ஆலோசனைகளை எந்த தயக்கமுமின்றி, மக்கள் நலனை மையமாக கொண்டு தெரிவிக்க வேண்டும்.

அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முனைவோருக்கு இடமளிக்கக்கூடாது. பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை முழுமையாக தடுப்பது அவசியம். பொதுமக்கள் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்திக் காட்டுவது நமது முதல் இலக்காக இருக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதால், தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும். கள்ளச்சாராயம், போதை பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும்.

அதுதொடர்பான குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். குற்றாவளிகளை உடனடியாக கைது செய்து தண்டனை பெற்று தர வேண்டும். சமூக ஊடகங்களை தொடர்ந்து கண்காணித்து பொய்ச்செய்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசின் திட்டங்கள் கடைகோடி மனிதரையும் சென்றடைய வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்பு ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பது வேதனையளிக்கிறது. இதனைத் தடுக்க, காவல்துறை, போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை ஒருங்கிணைந்து விபத்து தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த மாநாட்டில் இன்று காலை 11.45 மணி வரை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டமும், நண்பகல் 12.00 மணி முதல் 01.30 மணி வரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கான கூட்டமும், மாலை 05.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை காவல்துறை அதிகாரிகளுக்கான கூட்டமும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.