இதுகுறித்து விழிப்புணர்வு வாசகம் இடம்பெற வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

என்னையும், என் குடும்பத்தையும் சினிமாவில் இருந்து பிரிக்க முடியாது என சிஐஐ கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் பேச்சு.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் கருத்தரங்கை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார். சிஐஐ கூட்டமைப்பு சார்பில் தென்னிந்திய ஊடகம், பொழுதுபோக்கு தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இதில், இயக்குனர்கள் மணிரத்தினம், ராஜமௌலி, நடிகர்கள் ஜெயராம், ஜெயம் ரவி மற்றும் ரமேஷ் அரவிந்த் உள்ளோட்டர் கலந்துகொண்டுள்ளனர். இரண்டு நாட்கள் இந்த கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

இந்த கருத்தரங்கில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திரைத்துறையுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதால் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளேன். முற்போக்கான திரைப்படங்கள் எடுக்க வேண்டும். புகைபிடிக்க கூடாது, மது அருந்த கூடாது என திரை படத்திற்கு முன்பு ஒளிபரப்புவது பாராட்டிற்குரியது. அதே போல் குட்கா கஞ்சா குறித்தும் விழிப்புணர்வு வாசகம் இடம் பெற வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், நானும் சினிமா துறையை சேர்ந்தவன் நான், நாடக மேடையிலும் நடித்தவன். முதல்வராக என்னை பார்க்க வேண்டாம். உங்களில் ஒருவனாக பாருங்கள். அப்பா முதல் எனது மகன் வரை சினிமா துறையில் தொடர்பு உண்டு. சினிமாவையும், திமுகவையும் பிரிக்க முடியாது போல் என்னையும், என் குடும்பத்தையும் சினிமாவில் இருந்து பிரிக்க முடியாது என்றார்.