டிராக்டர் கவிழ்ந்து கால்வாயில் விழுந்து விபத்து..! 7 பேர் பலி, 20 பேர் காயம்..!

ஆந்திராவில் டிராக்டர் கவிழ்ந்து கால்வாயில் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் டிராக்டர் ஒன்று கவிழ்ந்து கால்வாயில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர். குடும்ப விழா ஒன்றில் பங்கேற்பதற்காக வட்டிசெருகூர் கிராமத்தில் இருந்து 40 பேர் கொண்ட குழு டிராக்டரில் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் கே.ஆரிப் ஹபீஸ் கூறுகையில், 40 பேரை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த டிராக்டர், கட்டுப்பாட்டை இழந்து பாசன வாய்க்காலில் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியது என்றும் அதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், நான்கு பேர் குண்டூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்ததாகவும் கூறினார்.

மேலும், இறந்தவர்கள் மிக்கிலி நாகம்மா, மாமிடி ஜான்சி ராணி, கட்டா நிர்மலா, கரிகாபுடி மாரியம்மா, கரிகாபுடி ரத்னகுமாரி, கரிகாபுடி சுஹாசினி மற்றும் சலோமி என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து குண்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.