குடியரசு தலைவர் நாளை தமிழகம் வருகை..! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் நாளை மாலை சென்னை வருகை புரிய உள்ளார். குடியரசு தலைவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்க உள்ளார். இதனை தொடர்ந்து, ஆக.6-ஆம் தேதி ஆளுநர் அளிக்கும் விருந்தில் தமிழக முதல்வர் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் 6 இல் சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 165-வது பட்டமளிப்பு விழாவிலும்  குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.

மேலும், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நாளை மாலை வருகை தர உள்ளார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி மசினகுடி ஹெலிபேடு, தெப்பக்காடு யானைகள் முகாம்களில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், தாயை பிரிந்த யானை குட்டிகள் ரகு, பொம்மி அவற்றை பராமரித்துவரும் பழங்குடி தம்பதி பொம்மன் – பெள்ளி தம்பதியையும் குடியரசு தலைவர் சந்திக்க உள்ளார். இந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக நாளை வரை அனைத்து விடுதிகளிலும் சுற்றுலா பயணிகளை தங்க அனுமதிக்கக்கூடாது என விடுதி உரிமையாளர்களுக்கு போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதே போல் நாளை வரை சுற்றுலா பயணிகள் நீலகிரி செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.