அமலாக்கத்துறை இயக்குனரின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும்.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை.!

அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் மிஸ்ராவின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு அமலாக்கத்துறையின் தலைமை இயக்குனராக சஞ்சய் குமார் மிஸ்ரா நியமிக்கப்பட்டார். அப்போது இருந்த விதிகளின் படி, அமலாக்கத்துறை இயக்குனரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் மட்டுமே. ஆனால், குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று 3 ஆண்டுகள் நியமிக்கப்படுவதாக மத்திய அரசு 2021இல் அறிவித்து இருந்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தொண்டு நிறுவனம் ஒன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ரா மத்திய அரசுக்கு சாதகமான செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிந்து , அண்மையில் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத், சஞ்சய் கரோல் என 2 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த பதவிக்காலம் நீட்டிப்பை ஏற்றுக்கொள்கிறோம் எனவும் , ஆனால் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவி காலத்தை நீடிக்க முடியாது எனவும் , அவரை தவிர வேறு திறமையான அதிகாரிகள் இல்லையா என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி, சஞ்சய் மிஸ்ரா பதவி நீட்டிப்பை ஏற்க மறுத்து உத்தரவிட்டு இருந்தனர்.

இதனை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்து உள்ளது. அதில்,  200 நாடுகள் கொண்ட நிதி நடவடிக்கை பணிக்குழு நடவடிக்கை, சட்ட விரோத பணப்பரிவர்த்தனை ,  பயங்கரவாத பண பரிவர்த்தனை தடுப்புகள் கொண்ட பகுப்பாய்வு அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற உள்ளது எனவும், அதனால் சஞ்சய் மிஸ்ரா பதவி காலத்தை வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரை நீடிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தது. இந்த கோரிக்கை மனு மீதான விசாரணை இன்று மாலை உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.