1800 கோடி… அயோத்தியில் பிரமாண்டமாக திறக்கப்படும் ராமர் கோயில்..! தேதி விவரங்கள் இதோ… 

500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி அமைக்கப்பட்டு இருந்த இடம் ராமர் பூர்வ ஜென்ம பூமி என்று கூறி இந்துக்கள் அந்த இடத்திற்கு உரிமை கோரினர். இதனை தொடர்ந்து, கடந்த 1992 ஆம் ஆண்டு இந்துத்துவ அமைப்புகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. பல உயிர்கள் இந்த கலவரத்தில் பறிபோயின.

அதன் பிறகு பாபர் மசூதி அமைக்கப்பட்ட இடம் ராமர் பூர்வ ஜென்ம இடம் ஆதலால் அந்த இடத்தை இந்துக்களுக்கு ராமர் கோவில் கட்டுவதற்காக அனுமதி தர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் வழக்கு தொடரப்பட்டன. பல ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்ற வந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பின்படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த ராமர் கோவில் கட்டுவதற்கு என் நாடு முழுவதும் இருந்து நிதி திரட்டப்பட்டது. சுமார் 1800 கோடி ரூபாய் மதிப்பிட்டில் ராமர் கோயில் கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் இதன் பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றதாக உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து இருந்தார்.

தற்போது வெளியான தகவல் என்னவென்றால் வரும் 2024 ஜனவரி மாதம் 24ஆம் தேதி ராமர் கோவில் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14ஆம் தேதி இதற்கான பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அயோத்திக்கு செல்ல உள்ளார். அதன் பிறகு 24ஆம் தேதி ராமர் கோவில் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.