வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து..! கடைகள் எரிந்து நாசம்..100 பேர் மீட்பு..!

ஒடிசாவில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பூரியின் கிராண்ட் ரோட்டில் உள்ள லக்ஷ்மி மார்க்கெட் வளாகத்தின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சில நிமிடங்களிலேயே தீ அருகில் உள்ள அனைத்து கடைகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது.  இந்த விபத்தில் வளாகத்தில் உள்ள 40 கடைகளில் சில கடைகள் தீயில் எரிந்து நாசமானது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் 5 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 1 மணி நேர முயற்சிக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில் கட்டிடத்தின் மேற்கூரையில் சிக்கியிருந்த 3 பேரை தீயணைப்பு வீரர்கள் மயங்கிய நிலையில் மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தெரிவித்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் 106 பேரை பத்திரமாக மீட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். இந்த தீ விபத்து ஏற்பட்டது குறித்த காரணங்கள் எதுவும் தெரியவில்லை என்றும் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Leave a Comment