4-ம் கட்ட பேச்சுவார்த்தை….விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்..!

சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை, எம்.எஸ் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி டெல்லி சலோ பேரணியில் பங்கேற்று வருகின்றன.

பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் டெல்லி நோக்கி பேரணியை மேற்கொண்டனர். டெல்லி எல்லையில் போலீசார் அவர்களை தடுத்து வருகிறார்கள்.  இந்த அணிவகுப்பு நேற்று ஐந்தாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பஞ்சாப்-ஹரியானா எல்லைகளில் நடந்து வரும் ‘டெல்லி சலோ’ போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விவசாயிகள் சங்கத் தலைவர்களுடன் மத்திய அரசு நான்காவது சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது.  4-வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று இரவு 9 மணி அளவில் தொங்கி சுமார் இரவு 1 மணி வரை நடைபெற்றது.

பேச்சுவார்த்தை முடிந்த பிறகு பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ” இந்த சந்திப்பு இனிமையான சூழ்நிலையில் நடைபெற்றது. ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருப்பு வகைகள், மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை அரசு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படும்.

விவசாயிகள் போராட்டம்..! மத்திய அமைச்சர்களுடன் விவசாயிகள் 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை

அதன்படி NCCF (தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு) மற்றும் NAFED (இந்திய தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு) போன்ற கூட்டுறவு சங்கங்கள் ‘துவரம் பருப்பு’, ‘உளுந்த பருப்பு’, ‘மக்காச்சோளம்’ பயிரிடும் விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு குறைந்த விலையில் அவர்களின் பயிர்களை வாங்குவோம். திங்கள்கிழமை(இன்று ) காலைக்குள் அரசு முன்வைக்கும் திட்டங்கள் குறித்து விவசாயிகள் தலைவர்கள் முடிவு செய்வார்கள்” என்று கூறினார்.

பேச்சுவார்த்தை முடிந்த பிறகு பேசிய  பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் பொதுச் செயலாளர் சர்வான் சிங் பாந்தர்” நாங்கள் சக விவசாயிகளுடன் அரசு அளித்த திட்டங்களை பற்றி விவாதிப்போம். நிபுணர்களின் கருத்துக்களைப் பெறுவோம். அடுத்த இரண்டு நாட்களில் இதைப் பற்றி அரசுடன் விவாதிப்போம், அப்போது ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், இல்லையெனில் நாங்கள் எங்கள் டெல்லி சலோ அணிவகுப்பைத் தொடருவோம் என கூறினார்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விவசாயத் தலைவர்களுடனான மத்திய அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு மத்திய அரசுடனான சந்திப்பிற்குப் பிறகு விவசாயிகள் தங்களது ‘டெல்லி சலோ’ பேரணியை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக சர்வான் சிங் பாந்தர் தெரிவித்தார்.

 

Leave a Comment