ஆருத்ரா மோசடி கும்பலை பிடிக்க துபாய் அரசுடன் தமிழக காவல்துறை ஒப்பந்தம்!

ஆருத்ரா நிறுவன மோசடி கும்பலை பிடிக்க துபாய் அரசுடன் தமிழ்நாடு காவல்துறை பரஸ்பர ஒப்பந்தம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி வழக்கில் அதன் இயக்குநர்கள் வெளிநாடுகளில் தலைமறைவாக இருப்பதால், தமிழ்நாடு காவல்துறை இதுபோன்ற நடவடிக்கையை எடுத்துள்ளது.

சென்னை சூளைமேட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டுக்கு டிரேடிங் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. அதிக வட்டி தருவதாக கூறி பல லட்சம் பேரிடம் சுமார் ரூ.2,438 கோடி முதலீடு பெற்று மோசடி ஈடுபட்டதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் அளித்த புகாரில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஆருத்ரா நிறுவன முக்கிய இயக்குநர்கள் ராஜசேகர், அவரது மனைவி மகாலட்சுமி, மைக்கேல்ராஜ் உள்ளிட்டோர் துபாயில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆருத்ரா வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் நடிகர் ஆர்கே.சுரேஷ் துபாயில் பதுங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஆருத்ரா நிறுவன மோசடி கும்பலை பிடிக்க துபாய் அரசுடன் தமிழ்நாடு காவல்துறை பரஸ்பர ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.