பாரம்பரிய தொழில்… மத்திய அரசு அமல்படுத்திய விஸ்வகர்மா திட்டத்தின் பலன்கள்… கடன், வட்டி விவரம்..

ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவின் போது செங்கோட்டையில் கொடியேற்றிவிட்டு உரையாற்றிய பிரதமர் மோடி , பாரம்பரிய தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் பாரம்பரிய தொழில்களை செய்வோருக்கு கடனுதவி வழங்கப்படும் என அறிவித்தார்.

செய்வ்வாய்கிழமை அறிவித்த இந்த திட்டத்திற்கு, நேற்று (ஆகஸ்ட் 16) அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது வரும் செப்டம்பர் 17ஆம் தேதி பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு துவங்கப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திட்டம்பற்றி மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், கைவினை கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு அவர்களின் தொழில்களை மேம்படுத்தும் வகையில் கடன்கள் வழங்கப்பட உள்ளது. முதல் தவணையாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், அதனை செலுத்தியதன் பின்பு , அடுத்ததாக இரண்டாம் கட்டமாக 2 லட்சம் ரூபாய் வரையில் கடன் வழங்கப்படும்.

விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த கடன்களுக்கு 5 சதவீத வட்டி விதிக்கப்படும் என்றும், இதற்காக 13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் அடுத்தகட்ட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.