வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள்..! கிரேன் மூலம் தேர்வு மையத்திற்கு அழைத்துச்சென்ற காவல்துறை..!

ஆந்திரப் பிரதேசத்தின் என்டிஆர் மாவட்டத்தின் நந்திகிராமில் முழங்கால் அளவுள்ள வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சுற்றியுள்ள கிராமங்கள் முற்றிலும் நீரில் மூழ்கின. இந்த வெள்ளத்தினால் நெடுஞ்சாலையில் கூட வாகனங்கள் ஏதும் செல்லமுடியாததால், அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுத செல்ல முடியாத நிலை ஏற்பட்டது

இந்நிலையில், மாணவர்கள் செமஸ்டர் தேர்வில் கலந்து கொள்ள உதவுமாறு காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, மாணவர்களுக்கு உதவி செய்யும் வகையில், போலீசார் கிரேன் ஏற்பாடு செய்து, அதில் மாணவர்களை சாலையைக் கடந்து தேர்வு மையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

பிறகு, தேர்வு முடிந்து மாணவர்கள் வீடு திரும்ப போலீசாரும் உதவியுள்ளனர். இந்த சம்பவம் குறித்த வீடியோவை ஆந்திர காவல்துறை தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

மேலும், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணாவின் கிளை நதியான முன்னேறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் (NH 65) போக்குவரத்து தடைபட்டது மற்றும் அருகிலுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின என்பது குறிப்பிடத்தக்கது.