திருப்பதி மலைப்பாதைக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள்.! கைத்தடி, நேரக்கட்டுப்பாடு…

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் திருப்பதி மலைப்பாதை வழியாக நடைபயணமாக செல்கையில் வன விலங்குகளில் அச்சுறுத்தல் சமீப காலமாக அதிகரித்து கொண்டு வருகிறது.

சில தினங்களுக்கு முன்னர் மலைப்பாதை வழியாக ஒரு தம்பதி தங்கள் குழந்தையுடன் சென்று கொண்டு இருக்கும் போது, வனவிலங்குகள் அந்த 6 வயது குழந்தையை இழுத்து சென்றுள்ளது. பின்னர் காட்டுக்குள் இருந்து அந்த குழந்தை வனவிலங்குகள் தாக்கிய காயத்துடன் சடலமாக மீட்ட்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், வனவிலங்கு அச்சுறுத்தலை தவிர்க்க தற்போது திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் மலைப்பாதை வழியாக செல்வோர் காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். பெரியவர்கள் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படுவர்.

அதே போல, இருசக்கர வாகனங்களில் செல்வோர் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் தனித்தனியாக செல்ல கூடாது எனவும்  100 பேர் உடன் ஒரு குழுவாக செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே போல , மலைப்பாதை வழியாக செல்வோர்க்கு தற்காப்புக்காக 5 அடி உயர மர கைத்தடி வழங்கப்பட்டு வருகிறது. இதனை கீழ் திருப்பதியில் மலைப்பாதை பக்தர்களுக்கு கொடுத்து விடுகிறார்கள். அதனை மேல் திருப்பதியில் வாங்கி கொள்கிறார்கள். அதே போல மேல் இருந்து கீழ் செல்பவர்களுக்கு அந்த மரத்தடி கொடுக்கப்படுகிறது.