நெருங்கும் கனமழை…முன்னெச்சரிக்கைகள் தீவிரம்… காவல்துறை அதிரடி நடவடிக்கை.!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது கடந்த அக்டோபர் 21 முதல் துவங்கி பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் மழையளவு மேலும் தீவிரமடைந்து வருகிறது.

குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருநள்ளூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையை எதிர்கொள்ள கடந்த செப்டம்பர் மாதமே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு மாவட்ட ஆட்சியர்களுக்கும் முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

ரெட் அலர்ட்.. 6 மாவட்டங்களில் மிக கனமழை… வானிலை ஆய்வு மையம் தகவல்.!

தற்போது கனமழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், அதனை எதிர்கொள்ள தமிழக காவல்துறை சார்பில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 18 பேரிடர் குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

ஒரு குழுவில் 30மீட்புப்படையினர் வீதம் மொத்தம் 540 மீட்புப்படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இதில் மணிமுத்தாறு, கோவ புதூர், பழனி ஆகிய பகுதிகளுக்கு தலா 3 மீட்பு படை குழுவினரும், திருச்சி சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு 3 மீட்பு குழுக்களும், கடலூர் பகுதிக்கு 3 மீட்புப்படை குழுக்களும், ஆவடியில் 3 மீட்புப்படை குழுக்களும் தயார் நிலையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் சுமார் 27 ஆயிரம் பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 24 மணிநேர சுழற்சி அடிப்படையில் அவர்கள் வேலை செய்து வருகின்றனர். இதனால் சென்னையில் பெய்த கனமழையால் மழைநீர் அகற்றப்பட்டு 22 சுரங்கபாதைகளிலும் மழைநீர் தேங்காமல் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.