பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம்! பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் இந்திய பிரதமர் பேச்சு!

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை கண்டிக்க எஸ்சிஓ தயங்கக்கூடாது என்று பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் பிரதமர் மோடி பேச்சு.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 23வது மாநாடு இந்தியா சார்பில் பிரதமர் மோடி தலைமையேற்று காணொளி வாயிலாக நடத்தினார். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் பாதுகாப்பு, பொருளாதாரம், உணவு பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், ஆப்கானிஸ்தானின் நிலைமை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது, இந்த மாநாட்டில் காணொளி முலமாக உரையாற்றிய பிரதமர் மோடி, பயங்கரவாதிகளுக்கு சில நாடுகள் அடைக்கலம் கொடுத்து வருவதாக பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் பேசியுள்ளார்.

பிரதமர் மோடி உரையில், பயங்கரவாதம் பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதற்கு எதிராக நாம் போராட வேண்டும். சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தங்கள் கொள்கைகளின் கருவியாகப் பயன்படுத்துகின்றன மற்றும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கின்றன. SCO அமைப்பு அத்தகைய நாடுகளை விமர்சிக்க தயங்கக்கூடாது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை கண்டிக்க எஸ்சிஓ தயங்கக்கூடாது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் செரிப்பிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடு கூடாது எனவும் கூறினார். மேலும், பிரதமர் கூறுகையில், நாங்கள் எஸ்சிஓவை குடும்பமாக பார்க்கிறோம். பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு, இணைப்பு, ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை எங்கள் பார்வையின் தூண்கள். அமைதி, செழிப்பு, யூரேசியாவின் வளர்ச்சிக்கான முக்கிய தளமாக எஸ்சிஓ உருவெடுத்துள்ளது என்றார்.