செந்தில் பாலாஜியின் காவல் நவம்பர் 6ம் தேதி வரை நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அடுத்த மாதம் 6ம் மீண்டும் நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.  சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினர் கைது செய்த நிலையில், தற்போது புழல் சிறையில் இருந்து வருகிறார். இந்த சூழலில், செந்தில் பாலாஜியின் உடல்நிலை பாதிப்பு காரணமாக அவருக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், ஜாமீன் வழங்க இயலாது என சென்னை ஐகோர்ட் மனுவை தள்ளுபடி செய்தது. இதனால், ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

ஜாமீன் மறுப்பு.. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! இன்றுடன் முடிகிறது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல்!

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 13ம் தேதி செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 8வது முறையாக இன்று வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அடுத்த மாதம் 6ம் மீண்டும் நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 9வது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் இருந்து காணொலியில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.