கல்லூரிக்குள் பர்தா அணிந்து வர மறுப்பு..! பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் போராட்டம்..!

மும்பையின் செம்பூரில் உள்ள என்.ஜி.ஆச்சார்யா மற்றும் டி.கே.மராத்தே கல்லூரியின் சீருடைக் கட்டுப்பாடு காரணமாக ஹிஜாப் அல்லது பர்தா அணிந்த மாணவிகள் வளாகத்திற்குள் நுழைவதற்கு தடை விதித்தது. இதனால் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கல்லூரி வாயில் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் இந்த போராட்டத்தின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவ ஆரம்பித்தன. இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதன் பிறகு நிலைமை கட்டுக்குள் வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கல்லூரி முதல்வர் வித்யா கௌரி லெலே கூறுகையில், இந்த ஆண்டு எங்கள் கல்லூரியில் புதிய ஆடைக் கட்டுப்பாடு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான விதிமுறைகள் பெற்றோருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், மே 1ம் தேதி, புதிய ஆடைக் கட்டுப்பாட்டைப் பற்றி விவாதிக்க பெற்றோருடன் ஆலோசனை நடத்தினோம். அதில் புர்கா, ஹிஜாப், தாவணி அணியத் தடை என நாங்கள் தெரிவித்தோம். அப்போது அனைவரும் ஆடை விதியை ஏற்றுக்கொண்டனர். ஆனால் இப்போது எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அல்லது பர்தா அணிந்து வீட்டை விட்டு வெளியேறுவது பாதுகாப்பு மற்றும் தங்களுக்கு ஒரு மத பழக்கம், எனவே இந்த கட்டுப்பாடு தங்களுக்கு சங்கடமாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும், தங்கள் வசதிக்காக தாவணி அணிவதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பு கருதி புர்கா, ஹிஜாப் அல்லது தாவணி அணிந்து கல்லூரிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்று கல்லூரி அறிக்கை வெளியிட்டது. ஆனால், வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன்பு கழிவறைக்குச் சென்று ஹிஜாப்பை கழட்டி வைத்துவிட்டு மாலை வகுப்பறையை விட்டு வெளியேறும் போது மீண்டும் அணிந்து கொள்ளலாம் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.