மழை பாதிப்பு.. தென்மாவட்ட மக்களை உறுதியாக காப்போம் – முதலமைச்சர் உரை

கோவையில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.  பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் தமிழக அரசு மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலமைச்சர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற நிலையில், மனுக்கள் பெற்றதற்கான ஒப்புகை சீட்டுகளையும் வழங்கினார். இதன்பின் பேசிய முதல்வர், ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் எனது நேரடி கண்காணிப்பின் கீழ் வருகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த மாதம் சிறப்பு முகாம் நடத்தப்படும்.  முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். ஏழை மக்களுக்கு அரசின் மீதான நம்பிக்கை வலுவடைய வேண்டும். காரணம் சொல்கிறவர் காரியம் செய்ய மாட்டார்.

இந்த 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்… வானிலை மையம் அறிவிப்பு!

பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் தட்டி கழிக்க கூடாது. மக்களின் பிரச்னைகளுக்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வுகளை அளிக்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர், தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்து அமைச்சர்களுடன் பேசி வருகிறேன். அரசின் திட்டங்கள் கடை கோடி மக்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதை நானே நேரில் ஆய்வு செய்து வருகிறேன். 13 அரசு துறைகள் வாயிலாக மக்களுக்கு சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து திட்டங்களும் அனைத்து மக்களையும் சென்று சேர வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக இருக்கிறது.

மேலும், மழை பாதிப்பு தொடர்பாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மழையின்போது செயல்பட்ட அனுபவத்தை கொண்டு தென்மாவட்ட மக்களை உறுதியாக காப்போம். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் நடைபெறும் என்றார்.