அரசியல் மாற்றங்களின் போது ராகுல் நாட்டில் இருப்பதில்லை.! – பினராயி விஜயன்

Pinarayi Vijayan: மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துப்பது அவரது பக்குவமற்ற அரசியலை எடுத்துரைக்கிறது என பினராயி விஜயன் கூறியுள்ளார்.

பாஜகவிற்கு எதிராக இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மக்களவை தேர்தலை எதிர்கொண்டு வருகிறது. இந்த வேளையில், கேரளாவில்  கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸுக்கு எதிராக பேசுவதும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் பேசுவதும் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல் கட்டமாக 21 மாநிலங்களில் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் கேரளா உட்பட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், கேரளாவில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் வேலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தனது விமர்சனத்தை முன் வைத்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், அவர் வேறு கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலும், அது அவர்களின் உள்விவகாரம் என்பதாலும் நாங்கள் அதுபற்றி கருத்து தெரிவிக்காமல் தவிர்த்தோம்.

ஆனால், பொதுத்தேர்தல் நேரத்தில் இங்கு வந்து மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது மிகவும் முதிர்ச்சியற்ற கருத்து. ராகுல் காந்தி ஒரு தீவிர அரசியல்வாதி அல்ல என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது. பல தீவிர அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தபோதெல்லாம் ராகுல் நாட்டில் இருந்ததில்லை என்று விமர்சனம் செய்துள்ளார்.

முன்னதாக, கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என ராகுல் காந்தி விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.