பொதுக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்த தடை விதித்தது ஆந்திரப் பிரதேச அரசு.
ஆந்திர மாநிலத்தில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரத்தில் தெலுங்கு தேசம் கட்சி நடத்திய இரு கூட்டங்களில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்ததால் சாலைகளில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த ஆந்திர அரசு தடை விதித்துள்ளது.
மாநில, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் சாலைகள் தவிர மாற்று இடங்களை தேர்வு செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. மாற்று இடங்களை தேர்வு செய்ய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத இடங்களில் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறினால் ஏற்பாட்டாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மிகவும் சரியான இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. கந்துகூர் மற்றும் குண்டூர் சம்பவங்களை அடுத்து பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த தடை விதித்து உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.