வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சுமார் ரூ.451 கோடி செலவில் புதிதாகக் கட்டப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆத்யநாத், பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்த 121 கோடி ரூபாயை உத்தரப்பிரதேச அரசு செலவிட்டுள்ளது. இந்த மைதானத்தின் கட்டுமானத்திற்காக பிசிசிஐ ரூ.330 கோடி செலவிடவுள்ளது. உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்குடன், வாரணாசியின் கஞ்சாரியில் 30 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படவுள்ள நவீன சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டிடக்கலை வடிவமைப்பு சிவபெருமானை மையமாக வைத்து இருக்கும். அதன்படி, மைதானத்தில் இருக்கும் இரவு விளக்குகள் திரிசூல வடிவத்தில் இருக்கும்.

மைதானத்தின் கூரைகள் பிறை வடிவத்திலும், படித்துறை படிகள் அடிப்படையிலான இருக்கைகள் மற்றும் முகப்பில் பில்விபத்ரா வடிவ உலோக தாள்கள் போன்ற வடிவமைப்புகளைக் கொண்டிருக்கும். ஸ்டேடியத்தில் பார்வையாளர்கள் அமரும் பகுதி வாரணாசியில் உள்ள மலைத்தொடர்களின் சின்னமான படிகளை போன்று வடிவமைக்கப்படும். இந்த மைதானத்தில் 30,000 பார்வையாளர்கள் அமரலாம்.

இந்த மைதானம் 2025 டிசம்பரில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, பிற்பகல் 3:15 மணியளவில், ருத்ராக்ஷ் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்தை அடையும் பிரதமர், காசி சங்க கலாச்சார பெருவிழாவில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேசம் முழுவதும் கட்டப்பட்டுள்ள 16 அடல் உண்டு உறைவிட பள்ளிகளையும் திறந்து வைக்கிறார்.