கர்ப்பிணி பெண் உயிரிழப்பு..! கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்..! மருத்துவமனைக்கு சீல்..!

உத்திரபிரதேசத்தில், கர்ப்பிணி உயிரிழப்பை தொடர்ந்து, போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

உத்திரபிரதேசம் கோராக்பூரில் சத்யம் என்ற மருத்துவமனை இயங்கி வந்துள்ளது. இந்த மருத்துவமனை பல வருடங்களாக இயங்கி வந்த நிலையில், இந்த மருத்துவமனையை 12-ஆம் வகுப்பு மட்டுமே படித்த நிஷாத் என்பவர் நடத்தி வந்துள்ளார்.

ஜெயின்பூர் பகுதியைச் சேர்ந்த சோனாவத் தேவி என்ற 30 வயது கர்ப்பிணிப் பெண் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, போலி மருத்துவர் நிஷாத் மீது உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாருக்கு பின்பு தான் அவர் போலி மருத்துவர் என்ற விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில்,விசாரணையில், நிஷாத் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்றும், அவர் நடத்தி வந்த மருத்துவமனை யாருக்கும் சிகிச்சை அளிக்க வராத மருத்துவர்களின் சான்றிதழ்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் போலீஸார் கண்டறிந்தனர்.

இந்த விவகாரத்தில் சுகாதாரத் துறையைச் சேர்ந்த சில ஊழியர்களின் பங்கும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவர்கள் மீது சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போலி மருத்துவரின் சொத்தை பறிமுதல் செய்ய மாவட்ட ஆட்சியரிடம் முறையிடப்படும் என்றும் எஸ்எஸ்பி கூறியுள்ளார்.

Leave a Comment