இபிஎஸ்-க்கு புதிய சிக்கல்.! சொத்துக்கள் மறைப்பு புகாரில் சிக்குவாரா.? முதற்கட்ட விசாரணை தொடக்கம்….

இபிஎஸ் தனது சொத்துக்களை தேர்தலில் மறைத்த புகாரில் இன்று காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது சொத்து மறைப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றியடைந்தார். அந்த தேர்தலில் வழக்கமாக வேட்பாளர்கள் அளிக்கும் சொத்து பட்டியல் விவரம் போல தனது சொத்து விவரத்தையும் அளித்தார் எடப்பாடி பழனிச்சாமி.

ஆனால், அதில் குளறுபடி உள்ளது எனவும், எடப்பாடி பழனிசாமி தனது சொத்துக்களை மறைத்து தேர்தலில் போட்டியிட்டார் எனவும், வழக்கறிஞர் மிலானி என்பவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குப்பதிவின் கீழ் முதற்கட்ட விசாரணையை, மத்திய குற்றப்பிரிவு காவல் ஆணையர் சூர்யா மற்றும் ஆய்வாளர் புஷ்பராணி ஆகியோர் அடங்கிய குழு தொடங்கியுள்ளனர். இந்த முதற்கட்ட விசாரணையில் எடப்பாடி பழனிசாமிக்கு சொந்தமான வங்கி கணக்குகளில் உள்ள வரவு செலவு விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த முதற்கட்ட விசாரணியில் எடப்பாடி பழனிசாமி மீது புகார் உறுதிசெய்யப்பட்டால் மக்கள் பிரதிநிதித்துவம் சட்டத்தின் கீழ் அவர் மீது புகார் உறுதிசெய்யப்பட்டு விசாரணை அடுத்தகட்ட நகர்வுக்கு செல்லும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.