நாடாளுமன்ற கூட்டம் – எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 7-ஆம் நாள் கூட்டம் இன்று நடைபெறுவதையொட்டி எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. மணிப்பூர் வன்முறை மற்றும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கியுள்ளது. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி மறுத்து வரும் நிலையில், மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானமும் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தன. இதன் மீது விவாதம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், பிரதமர் உடனடியாக பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.