பரனூர் டோல்கேட்டை இனி “பா ஜ க மாடல் டோல்கேட்” என்றே அழைக்கலாம்.! சு.வெங்கடேசன் எம்.பி

ஆளும் பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சி நிறைவடைந்துள்ள நிலையில், ஒவ்வொரு வருடமும் அந்த அரசினுடைய நிலையைப் பற்றி, அந்த அரசு செய்திருக்கக்கூடிய செலவுகளை பற்றி ஆய்வு செய்து, அதற்கு ஒரு ஒப்பீடு கொடுக்கும் சிஏஜி அறிக்கை ஆனது வெளியாகியுள்ளது. அதில் ஒன்றிய பாஜக அரசின் ஏழு ஊழல்களைப் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் உட்பட பலர் விமர்சித்து உள்ளனர்.

தற்போது இந்த சிஏஜி அறிக்கை தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நவீனஊழலின் அடையாளமான பரனூர் டோல்கேட்டை இனி “பா ஜ க மாடல் டோல்கேட்” என்றே அழைக்கலாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “ஒன்றிய பாஜக அரசின் ஏழு ஊழல்களைப் பற்றி பேசியுள்ள சி.ஏ.ஜி அறிக்கை ஒரு பெரும் பூகம்பத்தை உருவாக்கியுள்ளது. அதில் முக்கியமான ஒன்று “டோல் கேட்” ஊழல்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “செங்கல்பட்டு – பரனூர் டோல் கேட்டில் ஓராண்டில் ஒரு கோடியே 12 லட்சம் வாகனங்கள் சென்றுள்ளது. இதில் 62 லட்சம் வாகனங்கள் டோல்கேட் கட்டணம் செலுத்தாத வி ஐ பி வாகனங்கள் என்று கணக்கு எழுதப்பட்டுள்ளது. நவீனஊழலின் அடையாளமான பரனூர் டோல்கேட்டை இனி “பா ஜ க மாடல் டோல்கேட்” என்றே அழைக்கலாம்.” என்று சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.