OneNationOneElection: ஒரே நாடு, ஒரே தேர்தல்! முன்னாள் குடியரசு தலைவர் தலைமையில் ஆலோசனை!

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதற்கான மசோதாவை சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்ற திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால், ஒரே நேரத்தில் தேர்தல் குறித்த மசோதா மற்றும் விவாதம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நடைபெறவில்லை. இதனிடையே, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

இந்த சிறப்பு குழுவில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், என்கே சிங், சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே மற்றும் ஊழல் ஒழிப்பு முன்னாள் ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். குழுவின் கூட்டங்களில் மத்திய சட்ட அமைச்சர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த சிறப்பு குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முடிவெடுக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடத்துவது சாத்தியமா என்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.