ஒரே நாடு, ஒரே தேர்தல்: ஜன.15க்குள் பொதுமக்கள் கருத்து கூறலாம்!

நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு ஆலோசனைகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சிறப்பு குழுவில் மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், என்கே சிங், சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே மற்றும் ஊழல் ஒழிப்பு முன்னாள் ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த சிறப்பு குழு பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறது.

ஜெய்ப்பூரில் இன்று இந்திய காவல்துறை டிஜிபிக்கள் மாநாடு.! பிரதமர் மோடி – அமித் ஷா பங்கேற்பு…

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைகளும் கேட்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.  இதன்படி, இந்த சிறப்பு குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முடிவெடுக்கும் என கூறப்பட்டது. மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகேட்பு தொடங்கியுள்ளது. அதன்படி, ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ஜனவரி 15ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த சட்டங்களில் திருத்தம், நிர்வாக கட்டமைப்பு மாற்றம் குறித்த ஆலோசனைகளை அனுப்பலாம். அதாவது, ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்த தற்போதைய சட்ட நிர்வாகத்தில் மாற்றம் செய்ய ஆலோசனைகளை வழங்கலாம். தங்கள் பரிந்துரைகளை onoe.gov.in அல்லது [email protected] மின்னஞ்சலில் அனுப்பலாம் என ஒரே நாடு, ஒரே தேர்தல் குழு செயலாளர் கூறியுள்ளார்.