தீபாவளி பண்டிகை – ஆம்னி பேருந்துகள் வழித்தடம் மாற்றம்..!

வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது வசதிக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது ஆம்னி பேருந்து சங்கம் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி கோயம்பேட்டில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகள் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை வியாழக்கிழமை முதல் 11 ஆம் தேதி வரை ஆம்னி பேருந்துகளின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, வடபழனி, தாம்பரம், பெருங்களத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படாது என்றும், நசரத்பேட்டை வழியாக வண்டலூர், கிளாம்பாக்கம் வெளிவட்டச் சாலை வழியே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்றும் ஆம்னி பேருந்து சங்கம் அறிவித்துள்ளது.

மேலும், செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டில் புறப்பட்டு நசரத்பேட்டை புறவழிச்சாலை வழியாக கிளம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்று அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.