OBC பிரிவினர்: வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லை – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

OBC பிரிவினருக்கு சாதிச் சான்று வழங்கும் போது ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்திய அரசு பணியிடங்களுக்கான நியமனங்கள் மற்றும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் 27% இட ஒதுக்கீடு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) வளமான பிரிவினரை (Creamy layer) நீக்கி வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் இந்திய அரசால் அறிவிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வளமான பிரிவினரை நீக்குவதற்கான நெறிமுறைகளும் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

வளமான பிரிவினரை நீக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான வரம்பை கணக்கிடும் போது ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தை சேர்க்கக்கூடாது என வழிகாட்டு நெறிமுறையையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1993ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 2017ம் ஆண்டு ரூ.8 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.