இனி அனைத்து சேவைகளும் ஒரே ஆப்பில்.. விரைவில் ‘Super App’ ..!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்வது அனைவருக்கும் தெரிந்ததே.  டிக்கெட் புக் செய்ய ஒரு ஆப், புகார்களை பதிவு செய்ய இன்னொரு ஆப், ரெகுலர் டிக்கெட் எடுக்க ஒரு ஆப், ரெயில்  நிலை, பி.என்.ஆர் ஸ்டேட்டஸ் என ரெயில்வேயுடன் சேர்த்து பல ஆப்ஸ் பிளே ஸ்டோரில் கிடைக்கின்றன.

தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய Rail Connect ஆப் உள்ளது. இது மில்லியன் கணக்கான பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது. மேலும் யுடிஎஸ் (UTS), ரெயில் மடாட்(Rail Madad) ஆப்களும் ஆயிரக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். ஆனால் தற்போது இந்த அனைத்து சேவைகளையும் ஒரே ஆப் மூலம் கொண்டு வர இந்திய ரயில்வே தயாராகி வருகிறது.

இதற்கான “சூப்பர் ஆப்” (Super App) என்ற ஒன்றை இந்திய ரயில்வே உருவாக்கி வருகிறது. ரயில்வே தொடர்பான அனைத்து வகையான சேவைகளையும் இந்த “சூப்பர் ஆப்” (Super App) மூலம் ஒரே இடத்தில் வழங்குவதே இந்த செயலியின் முக்கிய நோக்கம் என்று கூறலாம். இதற்காக ரயில்வே துறை ரூ. 90 கோடி வரை செலவில் புதிய ஆப் தயாராகி வருவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது ரயில்வே அமைச்சகத்தின் ரயில்வே தகவல் அமைப்பு மையத்தால் (CRIS) உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

பயனர்களின் கருத்துகளின் அடிப்படையில் செயலியை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த “சூப்பர் ஆப்” (Super App) கிடைத்தால் இனி ரயில்வே தொடர்பாக அதிக ஆப்ஸ்களை டவுன்லோட் செய்ய வேண்டிய அவசியமில்லை. மேலும், IRCTC வழங்கும் விமான டிக்கெட் முன்பதிவு மற்றும் உணவு விநியோகம் போன்ற சேவைகளும் இங்கே கிடைக்கும். புதிய சூப்பர் ஆப் விரைவில் வெளியாகும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.