தோனி போட்ட அந்த கண்டிஷன்.! ஒரு நோ பால் கூட வீசவில்லை….

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ஐபிஎல் போட்டிகளில் “நோ-பால்” மற்றும் அதிக வைடுகளை வீச வேண்டாம் என்று தனது பந்து வீச்சாளர்களை எச்சரித்துள்ளார்.

16-வது ஐபிஎல் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் “எல் கிளாசிகோ” எனும், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது.

நேற்று நடைபெற்ற MI உடனான போட்டியில் CSK அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 158 ரன்கள் இலக்கை துரத்திய அந்த அணிக்கு கான்வே டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து வந்த ரஹானே அதிரடியாக ஆடி MI அணி வீசிய பவுலிங்கை வெளுத்து வாங்கினார்.

அவர் 61 ரன்களில் அவுட் ஆக, அதன் பின் வந்த துபே 28 ரன்களில் நடையை கட்டினார். இருப்பினும் நிதானமாக ஆடி வந்த ருத்துராஜ் 40 அடிக்க, CSK 18.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியது.

அந்த வகையில், மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில், சென்னை பவுலர்கள் ஒரு நோ பால் கூட வீசவில்லை. முன்னதாக, கடந்த 3-ம் தேதி நடைபெற்ற லக்னோ உடனான போட்டியின் போது, சிஎஸ்கே அணி கேப்டன் தோனி தனது அணியின் பந்து வீச்சாளர்கள் நோ-பால் மற்றும் வைடு பந்துகளை வீசுவதை குறைக்க வேண்டும்.

மேலும், தனது அணியினர் அத்தகைய பந்துவீச்சைக் குறைக்க வேண்டும் இல்லையெனில் அவர்கள் புதிய கேப்டனின் கீழ் விளையாடுவார்கள் என்றும் இது எனது இரண்டாவது எச்சரிக்கை, இதையும் கேட்காவிட்டால் நான் கேப்டன்ஷிப்பில் இருந்து விலகுவேன் என்று தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment