“என் மீது எந்த வழக்கும் இல்லை” – கைது செய்யப்படுவதற்கு முன் இம்ரான் கான் வெளியிட்ட வீடியோ!

ஷேபாஸ் ஷெரீப் அரசு தன்னை சிறையில் அடைக்க விரும்புவதாக இம்ரான் கான் வீடியோ வெளியீடு.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பிடிஐ தலைவருமான இம்ரான் கானை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற (IHC) வளாகத்தில் பாகிஸ்தான் சிறப்பு படை கைது செய்தது. பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தான் ராணுவத்தை விமர்சித்து பேசியதாகவும், ஊழல் குற்றசாட்டுகள் காரணமாகவும் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.

இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்ட இம்ரான் கானை விசாரணைக்காக சிறப்புப்படை அழைத்து சென்றது. கைது நடவடிக்கையை தொடர்ந்து அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. பிடிஐ தலைவர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் அதிக அளவிவில் குவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ரூ.53 கோடி மதிப்புள்ள நிலத்தை தனது அறக்கட்டளைக்கு மாற்றிய புகார் தொடர்பான வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அரசாங்கம் தன்னை சிறையில் அடைக்க விரும்புவதாக கைது செய்யப்படுவதற்கு முன் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இந்த கஷ்டங்களுக்கு கீழ் வாழ்வதை விட நான் இறக்க தயாராக இருக்கிறேன், என் மீது எந்த வழக்கும் இல்லை. அவர்கள் என்னை கைது செய்து சிறையில் அடைக்க விரும்புகிறார்கள், அதற்கு நான் தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், என்னை 2 காரணங்களுக்காக கைது செய்ய முயற்சித்துள்ளனர். அதில், தேர்தல் அறிவிக்கப்படும்போது நான் பேரணிகளை நடத்துவேன் என்பதால் என்னை பிரச்சாரம் செய்வதிலிருந்து தடுக்கவும், மற்றொன்று உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் பட்சத்திலும், பிடிஎம் அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசியல் சாசனத்தில் இருந்து விலகும் பட்சத்தில், அரசியல் சாசனத்துக்கு ஆதரவாக தீவிரமான வெகுஜன இயக்கத்திற்கு மக்களைத் திரட்டுவதில் இருந்து என்னைத் தடுக்கவும் கைது செய்ய முயற்சிக்கிறார்கள் என்றுள்ளார்.