98 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமான நிஃப்டி..! முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்றத்துடன் வர்த்தகமாகத்தை நிறைவு செய்துள்ளது.

கடந்த 2 வாரங்களாக இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வந்தது. முந்தைய வர்த்தக நாளில் சென்செக்ஸ் 65,000 புள்ளிகளைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது. ஆனால், வாரத்தின் 3வது நாளான நேற்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் சரிவில் வர்த்தகமாகி வந்தது.

இந்நிலையில், இன்றைய வர்த்தக நாளில் 65,391 புள்ளிகளாக ஏற்றத்துடன் தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 339.60 புள்ளிகள் உயர்ந்து 65,785 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 98.80 புள்ளிகள் உயர்ந்து 19,497 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 65,446 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,398 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. சென்செக்ஸ் குறியீடு 65,500 புள்ளிகளை தாண்டி வர்த்தகம் நடைபெற்று வருவதால் முதலீட்டாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட ரூ.30,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.

பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால் சென்செக்ஸ் குறியீட்டில் மஹிந்திரா & மஹிந்திரா, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், என்டிபிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. மாருதி சுசுகி இந்தியா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.