இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது நீட் தேர்வு.! முன்னதாகவே வந்த மாணவர்கள்…

தேர்வு இன்னும் தொடங்கவுள்ள நிலையில், கடைசி நிமிட பதற்றத்தை தவிர்க்க முன்னதாகவே தேர்வு மையங்களுக்கு சென்ற மாணவர்கள்.

தேசிய தேர்வு முகமையானது (NTA), மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் (NEET) நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. அதன்படி, இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் சுமார் 18.72 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

499 நகரங்களில் நடக்கவிருக்கும் இத்தேர்வு, இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவடையும். மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கும் நிலையில், ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வர அறிவுறுத்தலின்படி, தேர்வு மையங்களில் குவிந்தனர் மாணவர்கள்.

கடும் கட்டுப்பாடு:

மேலும், மாணவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்வு மையங்களில் அனுமதிக்கப்படுகின்ற்னர். அதன்படி, நுழைவு சீட்டு, அடையாளச் சான்று தவிர வேறு எந்த ஒரு ஆவணங்களும் தேர்வறைக்குள் கொண்டு செல்ல கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் 1.50 லட்சம் மாணவர்கள்:

தமிழ்நாட்டில் மொத்தம் 1.50 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத ஆயத்தமாகியுள்ளனர். கோவையில் 9 தேர்வு மையங்களில் 7,127 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர், விழுப்புரத்தில் 7 தேர்வு மையங்களில் 3,820 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர், நெல்லையில் 12 தேர்வு மையங்களில் 6,879 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர்.

499 நகரங்களில் நீட் தேர்வு:

நீட் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வெளியே உள்ள 14 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள 499 நகரங்களில் உள்ள வெவ்வேறு மையங்களில் இன்று நடைபெற உள்ளது. ஆனால், வன்முறை காரணமாக மணிப்பூரில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.